நீரின்றி அமையாது உலகு என்பர். ஆனால் அந்த தண்ணீரினால்தான் எவ்வளவு பிரச்சினைகள் தோன்றுகின்றன. தண்ணீர் யுத்தம் தர்மயுத்தம் போன்று எண்ணி எல்லா இடங்களிலும் நடைபெற்று வருகின்றது. உலகம் முழுவதும் தண்ணீருக்காக பிரச்சினைகளும், யுத்தங்களும் கூட நடக்கின்ற சூழல்கள் நடைபெற்றுள்ளன. நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிரமங்கள் இருக்கலாம். சிந்து நதி நீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சினைகள் இருந்தன. அதில் உலக வங்கி தலையிட்டு 1960இல் தீர்த்து வைத்தது. 1961ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் கொலம்பிய நதிப் பிரச்சினையில் உடன்பாடு ஏற்பட்டது. சிரியாவில் உற்பத்தி ஆகின்ற ஜோர்டான் நதியில் பிரச்சினை ஏற்பட்டு இஸ்ரேலுக்கு எதிராக சிரியா, ஜோர்டான் போன்ற நாடுகள் மோதின. ஐ.நா.வும் அமெரிக்காவும் இப்பிரச்சினையில் தலையிட்டன. கங்கை நதிப் பிரச்சினையில் வங்காளதேசத்திற்கும் நமக்கும் எந்த உடன்பாடும் இதுவரை ஏற்படவில்லை. நைல் நதிப் பிரச்சினையில் எகிப்து, சூடான், எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா, தான்சானியா, ருவான்டா போன்ற நாடுகளுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டன. மானங்கர்த் நதிப் பிரச்சினையில் துருக்கிக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பகை உணர்வுகள். சீனாவில் மிக்காங் நதி நீர்ப் பிரச்சினையில் கம்போடியா, பர்மா, லாவோஸ், வியட்நாம் போன்ற நாடுகளுக்கிடையிலான பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை. 

சோவியத் ஒன்றியமாக இருந்தபோது துர்க்மேனி குடியரசு 50 ஆயிரம் ஏக்கர் பாலைவனத்தை திருத்த அமுதாரிய ஆற்றின் நீரை 1,400 கி.மீ. தொலைவுக்கு வெறும் கால்வாய் வெட்டி ஐந்து ஆண்டு காலத்தில் முடித்தது பெரிய சாதனையாகும். கங்கை காவிரி இணைப்பு முடியாது என சொல்பவர்கள் அமுதாரியா சாதனையை கவனத்தில் கொள்ள வேண்டும். உலகத்தில் நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரை பங்கீடு செய்வதை பற்றி விவாதிக்க 1956ஆம் ஆண்டு ஹெல்சிங்கில் பன்னாட்டு மாநாடு நடந்தது. அதில் நீர் பாய்ந்தோடும் இறுதி கட்டம் வரை உள்ள நாடுகளுக்கு பாயும் நீரில் உரிமை உண்டு என தீர்மானித்தது. 

இந்தியாவில் நதி நீர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமென்றால் அரசியல் அமைப்புச் சட்டம் 262ன்படி நதி நீர் வாரியங்கள் அமைக்கலாம். ஏதாவது ஒரு மாநிலம் உச்சநீதிமன்றம் அல்லது நதி நீர் தீர்ப்பாயங்கள் உத்தரவுகளை மதிக்கவில்லை என்றால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட நதி நீர் குறித்து நதி நீர் வாரியம் அமைத்து பிரச்சினைகளை தீர்க்கலாம். ஆனால் இதுவரை அந்த அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்தவில்லை. இதனால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் வராததால் நெல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3,116 கி.கி. நெல் கிடைக்கின்றது. ஆனால் கர்நாடகத்தில் நீர் வளங்கள் எல்லாம் இருந்தும் வெறும் 2,454 கி.கி. நெல்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? தமிழகத்தில் மனித ஆற்றல் அதிக அளவில் உள்ளது. கர்நாடகம் தண்ணீர் கொடுத்தால், தமிழகத்தில் நெல் உற்பத்தி அதிகரிக்கும். இது இந்திய நாட்டிற்குத் தானே நன்மையை கொடுக்கும் என்பதை கர்நாடகம் உணர மறுக்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளம் சண்டித்தனம் செய்கிறது. குமரி மாவட்டத்தின் நெய்யாற்றிலிருந்து துவங்கி, வடக்கே கோவை மாவட்டத்தில் ஆழியாறு பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழாவிலும் கேரளா பிரச்சினை செய்து வருகிறது.  மேற்கு நோக்கி பாயும் நதிகளை கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு திருப்பலாம் என பல பரிந்துரைகள் செய்தபோதும், அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்புத் திட்டம் வலியுறுத்தப்பட்டும் கேரளாவின் அலட்சியப் போக்கால் இத்திட்டங்கள் நிலுவையில் உள்ளன. கேரளத்தில் நீர்வளம் சராசரியாக 3,050 மி.மீ. ஆகும். இது தமிழகத்தைவிட 3.2 மடங்கு அதிகம். அங்கு கிடைக்கும் உபரி நீரை தேக்கி வைக்கவும் அணைகள் இல்லை. கேரள ஆறுகளில் ஓடும் நீர் வளம் மொத்தம் 2,500 டி.எம்.சி. ஆகும். இதில் 500 டி.எம்.சி. நீரை மட்டுமே கேரளம் பயன்படுத்துகிறது. 350 டி.எம்.சி.க்கு மேல் நீரை தேக்க வசதியும் இல்லை. சுமார் 2,000 டி.எம்.சி. நீர் அரபிக் கடலுக்கு செல்கின்றது. இந்த 2,000 டி.எம்.சி.யில் வெறும் 200 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு தருமாறு கேட்டும் தண்ணீர் இல்லையென்று அடித்துப் பேசுகிறது கேரளா. இதில் உள்ள நியாயத்தை எங்கே போய் சொல்ல? நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள அடவிநயினார் அணைக்கு கடப்பாரை, மண்வெட்டியுடன் தமிழக எல்லைக்கே முரட்டுத்தனமாக வந்தவர்தான் இன்றைய கேரள முதல்வர் அச்சுதானந்தன். வட தமிழகப் பகுதியில் பாய்ந்த பாலாறு, பொன்னை ஆறுகளில் ஆந்திராவால் பிரச்சினைகள் வந்தன.

தமிழ்நாட்டில் உள்ள 33 ஆற்றுப் படுகைகளில் மொத்த நீர்வளம் 35,726.74 மி.க.மீட்டர். இதைக் கொண்டுதான் தமிழகம் தனது நீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான சிக்கல்களுக்கு இடையில், தி.மு.க. அரசும், முதல்வரும் கங்கை காவிரி இணைப்பு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். அந்த வகையில், இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய வகையில், தமிழகத்தில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்ற வகையில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம், ரூ.369 கோடி செலவில் 73 கி.மீ. தூரம் கால்வாய் தோண்டும் பணிகள் விரைந்தும், தீவிரமாகவும் நடைபெறுகிறது. தாமிரபரணி, கன்னடியன் கால்வாயிலிருந்து, வெள்ளக் கால்வாய் மூலம் திசையன்விளை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் பயன்படும் வகையிலான இந்தத் திட்டத்தை, மார்ச் 2008இல் தமிழக முதல்வர் அறிவித்தார். இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாகும் இது. தாமிரபரணியில் வெள்ளக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை திருப்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 23,040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறவும், மக்களுக்கு குடிநீர் கிடைக்கவும் இத்திட்டம் தீட்டப்பட்டது. கடலுக்கு வீணாக செல்லும் 13,758 மி.க.மீட்டர் அடியிலிருந்து, 2,765 மி.க.அடி நீர் இத்திட்டத்தில் திருப்பப்படுகின்றது. இப்போது இப்பணிகள் 72 பகுதிகளாக பிரித்து, அதை 4 பிரிவுகளாக வகுத்து நடைபெறுகின்றன. இதில் ஒரு சில பகுதிகளுக்கு பணியின் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இத்திட்டத்தை இதயசுத்தியான அக்கறையோடு, தமிழக முதல்வர் தீவிர அறுவை சிகிச்சையின்போது மருத்துவமனை படுக்கையிலிருந்து துவக்கி வைத்தார் என்றால், அதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும்.

தாமிரபரணி மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 126 கி.மீ. தூரம் பயணித்து கடலில் கலக்கின்றது. பாபநாசம் அணையில் துவங்கி பொருநை ஆறு, வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி, கோடகன், திருநெல்வேலி, பாளையங்கால், மருதூர் கீழ், மேல், திருவைகுண்டம் தெற்கு, வடக்கு போன்ற கால்வாய்கள் மூலம் நீர் பாசனம் வழங்குகிறது. இந்த நேரடி பாசனம் போக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு, கருப்பா நதி, பச்சையாறு, நம்பியாறு என அணைகளை கொண்டு நெல்லை மாவட்டத்தை வளப்படுத்துகின்றது. இதை விரிவுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டதுதான் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு திட்டம். இத்திட்டத்தால் தெற்கே திசையன்விளை, உவரி, கூடங்குளம், சாத்தான்குளம், திருசெந்தூர் வரை உள்ள பகுதிகள் பயன்படும். இந்த பகுதிகளில் திருச்செந்தூர் வட்டாரத்தைத் தவிர, மற்ற இடங்களில் நீர்வளம் குறைவு. தேரிக்காடான செம்மண் இருக்கின்ற பகுதிகள், இருபோகம், முப்போகம் சாகுபடி என்று மாறக்கூடிய அளவிற்கு இந்த இணைப்புத் திட்டம் பயன்படும். 

இப்பகுதியில் அவ்வப்போது வறட்சி; விவசாயமும் அங்குள்ள மக்களுக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை. அங்குள்ள சாலைகளில் பயணித்தால் பச்சை நிறமானது ஒரு சில கிணற்றுப் பகுதிகளில் மட்டுமே தெரியும். மீதி இடங்கள் கட்டாந்தரையாக இருக்கும். பனை மரங்கள், முட்புதர்கள் மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். அதுபோலவே, ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகள் வானம் பார்த்த பூமியாக கந்தக பூமியாக இன்றைக்கு இருக்கின்றது. அந்த பூமியில் கருவேல மரங்கள்தான் அதிகம் உள்ளன. மானாவாரி பயிர்கள் அடிக்கடி பொய்த்து வருகிறது. அப்பகுதிக்கும் தாமிரபரணியிலிருந்து விவசாயத்திற்கு உபரி நீரை வழங்கக் கூடிய அளவில் திட்டங்கள் வேண்டும். ஏற்கனவே அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்பு இப்பகுதிக்கு பயன்படும் என்று திட்டமிடப் பட்டிருந்தாலும், அது கேரளாவின் பிடிவாதத்தால் கானல் நீராகவே இதுவரை இருக்கின்றது. இதன் வட பகுதிகள் இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகள் பயன்படும் அழகர் அணை திட்டமும் நடைமுறைக்கு வரவேண்டும். 

நதிகள் இணைப்புப் பிரச்சினையில் சுற்றுச்சுழல் பிரச்சினை, நில ஆர்ஜிதம் போன்ற காரணங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் முடிந்த அளவு தென்னிந்திய நதிகள் மற்றும் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைத்து, இறுதியில் வட இந்திய நதியான கங்கையோடு இணைக்கத் திட்டமிடலாம். இத்திட்டத்தை செயல்படுத்த நீண்டகாலம் ஆனாலும், அதற்கான தொடக்கத்தில் மும்முரம் காட்டுவது அவசியமாகும். நதிநீர் இணைப்பு திட்டத்திற்கான முயற்சிகள் 1998இலிருந்து எடுக்கப்பட்டாலும், 30 நதிகளை இணைப்பதும், அதில் 15 நதிகள் தென்னிந்திய தீபகற்ப தக்கணபீட பூமியில் உள்ள தீபகற்ப நதிகளாகும். அதுபோல வடபுலத்தில் இமாலய நதிகள் கிட்டத்தட்ட 15 வரை ஆகும். பேட்வா பன்சால் நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்கள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அப்பணியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 14 நதிகளை தேசிய சொத்து என்ற அறிவிப்பையும் இன்றைய மத்திய அரசு செய்துள்ளது. தமிழகத்திலிருந்து பல உதவிகளைப் பெறுகின்ற கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் நதி நீர் இணைப்பை எதிர்க்கின்றன. மகாராஷ்டிரமும் குஜராத்தும் இதே போக்கை கையாளுகின்றன.  தமிழகம் மட்டுமல்லாமல், தென் மாநிலங்கள் வளம் பெற கங்கை காவிரி நீரைத் திருப்பி வைகை பொருநை, குமரி வரை இணைக்க வேண்டும். இந்தப் பிரச்சினை அனைவராலும் இன்றைக்குப் பேசப்பட்டு வருகிறது. இந்த பத்தியாளர் 1983இல் நதிகள் தேசியமயம், நதிநீர் இணைப்பு, கேரள நதிகளைத் தமிழகத்தோடு இணைப்பு குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் நீதிபதிகள் எம்.சீனிவாசன், ஏ.ஆர்.இலட்சுமணன் ஆகியோரின் தீர்ப்பில் நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர். கங்கை காவிரி இணைப்பு சாத்தியம் தானா? சாதிக்க முடியுமா? கனவுத் திட்டம்தானா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் இதய சுத்தியோடு அணுகினால் எதையும் சாதிக்கலாம். சந்திர மண்டலத்துக்கே மனிதன் சென்று வந்தபின்பு அறிவியல் மூலம் எதையும் சாதிக்க முடியும். இதில் உலக அளவில் பல உதாரணங்கள் உள்ளன. 

1834இல் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கங்கை காவிரி இணைப்பைப் பற்றி ஆராய்ந்தார். கோதாவரி கிருஷ்ணா அணைக்கட்டுகளைக் கட்டிய கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பொறியாளரான காட்டன் இத்திட்டத்தை ‘நீரை எதிர்த்து இரும்பு’ என்று குறிப்பிட்டார். ஏனெனில் அப்போது இந்தியாவில் இரயில்வே இணைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இரயில்வே இணைப்பை விட கங்கை காவிரி இணைப்பு மிகவும் முக்கியமானது என்று அறிவுறுத்தினார். 

197172இல் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டாக்டர் கே.எல். ராவ் அவர்கள் கங்கை காவிரி இணைப்புத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இவருடன் டாக்டர் சதுர்வேதி, ராஜா ரெட்டி ஆகியோர் இணைந்து ஆய்வு நடத்தினர். இத்திட்டத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நடைமுறைப்படுத்த விரும்பினார். இத்திட்டத்தில் கங்கை பிரம்மபுத்திராவைக் கால்வாய் மூலம் இணைக்க வேண்டும். குஜராத் மகாராஷ்டிரா மேற்கு இராஜஸ்தான் மாநிலங்களில் கால்வாய்களை வெட்டி இந்த இரண்டு கால்வாய்களையும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலப் பகுதிகளில் இணைக்க வேண்டும். அதன் பின்பு வடபுலத்தில் வெட்டப்பட்ட கால்வாய் மூலம் கங்கை பிரம்மபுத்திரா நீரைத் தெற்கு முகமாகத் திருப்பி தக்காண பீடபூமியில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைக் கிழக்கேத் திருப்பலாம் என்ற வகையில் கே.எல்.ராவின் திட்டம் அமைந்து இருந்தது.

கேப்டன் ஜே. தஸ்தூர் பூமாலை திட்டம் இத்திட்டத்தின் மூலம் வெள்ளம், வறட்சி என்ற நிலையை மாற்றி மக்களுக்கு வேலைவாய்ப்பு தந்து உணவு உற்பத்தியைப் பெருக்குதல், மின் உற்பத்தி என்ற பல நோக்கங்கள் கொண்டு அமைக்கப்பட்ட திட்டமாகும். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது இதுகுறித்து ஆராய்ந்தார். 

கிருஷ்ணா நதியின் மேல் அமைந்திருக்கும் ஸ்ரீசைலம் நீர்த் தேக்கத்திலிருந்து சென்னைக்குக் குடிநீருக்காக 414 கிலோ மீட்டர் நீளத்திற்குத் தெலுங்கு கங்கை திட்டத்திற்காக வெட்டப்பட்ட கால்வாயைப் பெரிதாக்கித் தெற்கே திருப்பி காவிரிப் படுகையில் உள்ள கொள்ளிடம் நதியில் உள்ள கீழ் அணைக்குக் கொண்டு செல்லலாம். அல்லது மாற்றுத் திசையில் மேற்கே திருப்பி முக்கொம்பிலுள்ள அகண்ட காவிரியில் உள்ள மேல் அணையில் சேர்க்கலாம் அல்லது இரண்டிற்கும் மையப் பகுதியான கல்லணையிலேயே சேர்க்கலாமா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியிலிருந்து வைகை, வைப்பாறு, தாமிரபரணி இணைப்பைக் குமரி வரை கங்கை நீரை எடுத்துச் செல்லலாம்.

அமெரிக்க நீர்வளத் துறை ஆலோசகராக இருக்கும் டி.அனுமந்தராவ் இத்திட்டத்தை 30 ஆண்டுகளில் 30 இலட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றி முடிக்கலாம் என்று அறிவித்தார். இத்திட்டத்தின் மூலம் பீகார் மாநிலம் பாட்னா அருகே கங்கை நதியிலிருந்து வெள்ளப் பெருக்கில் 60 ஆயிரம் கன அடி நீரைப் பயன்பாட்டிற்குத் திருப்பலாம். 10 ஆயிரம் டி.எம்.சி. நீரை உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்கள் பயன்படுத்தலாம். மீதமுள்ள 50 ஆயிரம் டி.எம்.சி நீர் கோதாவரி ஆறு வழியாகக் கிருஷ்ணாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணைக்கு வந்தடையும். பின்பு அங்கிருந்து ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் காவிரி மூலம் அனுப்பப்படும்.

நதி நீர் பிரச்சினை குறித்து தேசிய நீர்வள அமைப்பு 1998இல் விரிவான ஆய்வை நடத்தியது. இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 246இன்படி நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த இணைப்புக்கான பணிகளை விரைவுபடுத்தலாம். கங்கை காவிரி இணைப்பினால் ஏற்படும் பல்வேறு பயன்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை:

இந்த இணைப்புத் திட்டத்தினால் பீகார், உத்திரப்பிரதேசம், அசாம், மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் ஏற்படும் வெள்ளக் கொடுமைகளைத் தடுக்கலாம்; தக்காணப் பீடபூமி அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்; தற்போதுள்ள நீர்வளத்தில் 20 சதவீதம்தான் பயன்படுத்தப்படுகிறது. மீதி 80 சதவீதம் வீணாக்கப்படுகிறது. இந்த வீணாகும் நீரை இந்த இணைப்புத் திட்டத்தினால் விவசாயம், குடிநீர் போன்ற பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.; மானாவாரி நிலங்களும் கங்கை காவிரி இணைப்பால் பயனடையும். இதனால் 5 ஹெக்டேர் நிலப்பரப்பு விவசாயம் செய்ய முடியும்; இத்திட்டத்தின் மூலம் 2,270 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்; உள்நாட்டில் நீர்வழிப் போக்குவரத்து வளர்ச்சி அடையும்; இந்த மாபெரும் இணைப்புத் திட்டத்தால் வேலைவாய்ப்பு பெருகும்; 

ஒரு கட்டத்தில் இந்தியா பாலைவனம் ஆகிவிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் உலகளவில் இந்தியாவில் 60 சதவீத நிலத்தடி நீர் வற்றிவிடும் என மறுபுறம், உலக வங்கி கடந்த 12.3.2010 அன்று தெரிவித்தது. 2025இல் நாடு முழுவதும் உள்ள 5,173 நிலத்தடி நீர் பாதைகளில், 615 பாதைகள் நீரோட்டம் குறைந்தும், 108 பாதைகள் வற்றி விடும் என்றும் அந்த அறிக்கையில் உலக வங்கி குறிப்பிடுகிறது. இது அபாயகரமான நிலையாகும். கடந்த 2001 கால கட்டத்திலிருந்து நிலத்தடி நீரை தோண்டி தோண்டி பகாசுர நிறுவனங்கள் குளிர்பானங்களையும், மினரல் வாட்டரையும் பாட்டில்களில் அடைத்து வியாபாரம் செய்வதால் நிலத்தடி நீருக்கு ஆபத்து வந்துவிட்டது. நிலத்தடி நீரை பாதுகாக்கவும், அதை நல்ல முறையில் மேலாண்மை செய்ய வேண்டுவது அனைவரின் கடமையாகும். இச்சூழ்நிலையில் நதி நீர் இணைப்பு அவசியம்.

தமிழகத்தில் மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீரில் 50 சதவீதம் வீணாகின்றது. இதில் 30 சதவீதம் கடலுக்கு செல்கின்றது. ஆறுகள் மூலம் 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கின்றது. இந்த தண்ணீரை எல்லாம் பயன்படுத்த வேண்டும்; வீணாக்கக் கூடாது என்ற சிந்தனையில்தான் நதி நீர் இணைப்பு. தமிழகத்தை பொறுத்தவரை நதி நீருக்கு அண்டை மாநிலங்களை சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது. அந்த வகையில் வீணாக கடலில் கலக்கும் நதிகளை இணைத்து, கங்கை காவிரி தென் குமரியைத் தொட்டால் தமிழகம் வளம் பெறும்.

‘வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகையால்

 மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்’

என்ற பாரதியின் கனவு நனவாகும் நாள் எப்போதோ?