உலகில் தொன்மையான மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு மற்றும் சமஸ்கிருத மொழிகள் காலத்திற்கும், பல வரலாற்றுப் போக்குகளுக்கும் ஈடுகொடுக்க இயலாமல் போய்விட்டன. கன்னித்தமிழ் மட்டும் எவ்வித பாதிப்புக்கும் உட்படாமல் தழைத்து நிற்கிறது. அன்றாட நடைமுறைக்கு உகந்ததாகவும், உணர்ச்சிகளுக்கு ஈடுகொடுப்பதாகவும், தத்துவ ஆழம் பொருந்திய உலக அறிவு நோக்குடனும், மொழியின் தன்மையில் வேரூன்றியிருக்கும் அபார நயமும்; இயற்கையுடனும், இயற்கையின் உருவகத் தெய்வங்களுடன் இணைந்தே வாழும் கிராமியக் குடிமக்களின் வன்மையான சிந்தனைக்கும் ஏற்ற வகையில் தமிழ் மொழியின் வீச்சு என்றைக்கும் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாகத் திகழ்கிறது. ஆதியில் சமஸ்கிருதம் நடைமுறையில் பெயருக்கு இருந்து இன்றைக்கு அதன் வேர்கள் எங்கே உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மன்னர்கள், பிற அகம் புறம் ஆதிக்கம் ஆகியவற்றைத் தாண்டி தமிழ் மொழி வாழ்ந்து வருகிறது.

மரபு ரீதியான கலாச்சாரங்கள் படிப்படியாக அழிந்து வருகின்றபோது தமிழர்களின் தொன்மையும் செந்தமிழும் என்றைக்கும் புதுமையாக வளமாகத் திகழ்கின்றது. வலுவான தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து தமிழ் மொழி நிலைத்திருக்கிறது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பின்னோக்கி அதன் சுவடுகளைப் பார்க்கையில் அதனுடைய பாரம்பரியம், ஆழமாக தன்னோடு வைத்துள்ள ஈடு இணையற்ற புதையல்கள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கிடைத்த அருட்கொடைகளாகும். தீரத்திற்கு ரோமானியமும் (கீணிட்ச்ண ண்tணிடிஞிடிண்ட்), பகுத்தறிவுக்கு கிரேக்கமும் (எணூஞுஞுடு ணூச்tடிணிணச்டூடிtதூ), அறிவு வாத நுட்பத்திற்கு பிரெஞ்சும் (ணடிஞிஞுtதூ ணிஞூ டூணிஞ்டிஞி ஊணூஞுணஞிட) என்பது போல தமிழ் மொழி மேற்குறிப்பிட்ட அத்தனை குணங்களும் ஒருங்கே கொண்ட சிறப்புத் தன்மை கொண்டதாகும். தமிழ் மொழிக்கு உள்ள இலக்கணம், கவிதைத் தன்மையில் வேகமும் அதன் காலமும் மற்ற மொழிகளைவிட காலத்தில் மூத்தத் தன்மைக் கொண்டதாகும்.

மானுடம் மற்ற ஜீவராசிகளிடம் இருந்து வேறுபடுத்துவதே, அவனது / அவளது சிரிப்பும், பேச்சும்தான் என்பார்கள். மனிதன் குகைகளில் வாழ்ந்தபோது, வெறும் சப்தங்கள் மூலம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில், சப்தங்கள் மொழி வளர்ச்சியடைந்தன. மொழி என்பது கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்ற முக்கிய அடையாளமாகக் கருதப்படுவதால் மொழியின் தனித்தன்மையைப் பாதுகாக்கப் போராட்டங்கள் நடைபெறுவதை நாம் காண்கிறோம்.

2009இல் யுனெஸ்கோ அழிந்து விடும் மொழிகள் பற்றி வெளியிட்டுள்ள வரைபடத்தில் சுமார் 2,473 மொழிகள் அழிவின் எல்லையில் உள்ளது என்றும், 1950க்கு பின் இந்தியாவில் ஐந்து மொழிகள் அழிந்து விட்டன என்றும் கூறியுள்ளது. மேலும் 42 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. 63 மொழிகள் நிச்சயம் மறைந்துவிடும்; 82 மொழிகள் அழியும் நிலையில் உள்ளது என்று பட்டியலிட்டுள்ளது. 1894இலிருந்து 1928 வரை இந்தியாவில் பழக்கத்திலிருந்த மொழிகள் குறித்து ஜி.ஏ.க்ரியர்சன் ஆய்வு செய்து முழுமையான விவரங்களை வழங்கியிருக்கிறார்.

மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை, பாரம்பரியத்தை மறக்கும்போது கலாச்சாரமும் மறையத் தொடங்குகிறது. அப்போது அதற்கு அடிப்படை என்று கருதப்படும் மொழி மட்டும் எப்படி நீடித்து நிலைக்கும்? துருக்கியின் வடமேற்குப் பகுதிகளில் பேசப்பட்ட மொழி ‘உபிக்’ (க்ஞதூடுட). இந்த மொழியைப் பேசத் தெரிந்த நபர் டெப்விக் எசன்ச் என்பர். மொழியியலார்கள் துருக்கியிலுள்ள அவரைக் காண அவரது கிராமத்துக்குச் சென்றனர். எசன்ச்சின் மூன்று மகன்களில் ஒருவருக்குக் கூட உபிக் மொழி தெரியாது. மாறாக, அவர்கள் துருக்கி மொழியில் பேசுவதையே விரும்புகின்றனர். 1992ஆம் ஆண்டு எசன்ச் இறந்து போனார். அவரது கல்லறையில், “இது டெப்விக் எசன்ச்சின் கல்லறை. உபிக் என்ற மொழியைப் பேசிய கடைசி மனிதன்” என்று எழுதப்பட்டுள்ளது. அவர் மறைந்தவுடன் உபிக் மொழியும் இறந்துவிட்டது.

“மறையும் மொழிகள்” என்ற பிரிட்டனைச் சார்ந்த ஒரு கலாச்சார அமைப்பு, அதிகமான ஆய்வுகளைச் செய்துள்ளது. இதில் பணியாற்றும் மொழியியலாளர் ப்ரூஸ் கானல் என்பவர் 199495இல் மாம்பிலா என்ற பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிறைய மொழிகள் (அடவாவா என்ற இடத்தில் பேசப்பட்டவை) மறையும் அபாயத்தில் இருந்ததைக் கண்டார். கசாபே என்ற மொழி போகோன் என்ற ஒரே ஒருவர் மட்டுமே பேசக் கூடியதாகும். அவரது சகோதரிக்கு கசாபே மொழி புரியும். ஆனால் பேசத் தெரியாது. அவரது குழந்தைகள், பேரக் குழந்தைகள் யாருக்குமே கசாபே மொழி தெரியாது. போகோன் மறைவுடன் கசாபே மொழியும் இறந்து விடும்.

உலகில் கிட்டத்தட் 7,000 மொழிகள் வழக்கத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். சில பகுதிகளில் அதிகமான மொழிகள் வழக்கில் உள்ளன. ஆனால், பல எழுத்து வடிவத்தில் இல்லை. உலகில் பயன்படும் அனைத்து மொழிகளும் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. சில பூர்வகுடிகள் வித்தியாசமாக ஒரு மொழியைப் பேசும் வழக்கம் கொண்டுள்ளனர். உதாரணமாக, 1998ஆம் ஆண்டு ஜகார்தாவுக்குக் கிழக்கே ‘மாம்பரமோ’ நதிக்கருகே ‘வஹீததே’. ‘ஆகேததே’ என்ற குழுக்கள் வசித்தனர். மொத்தமே இவை இரண்டையும் சேர்த்தே 50 குடும்பங்கள் தானிருக்கும். இவர்கள் பேச்சு வித்தியாசமாக இருந்ததால் அவர்கள் பேசியது புதிய மொழிகள் என்றே கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டதென டேவிட் கிறிஸ்டல் என்ற மொழி ஆய்வாளர் தெரிவிக்கிறார்.

உலகில் வழக்கத்தில் உள்ள மொழிகளில் 90 சதவீதம் வரை இந்நூற்றாண்டில் இல்லாமல் போய்விடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. 11 நாட்களுக்கு ஒரு மொழி புழக்கத்திலிருந்து அழிந்துவிடுகிறது. பிப்ரவரி 21ஆம் நாள் பன்னாட்டு தாய்மொழி தினமாக அறிவிக்கப்பட்டாலும், மொழிகளை பேணி காக்க வேண்டிய சிந்தனை உலகளவில் இல்லாமல் போய்விட்டது. உலகில் சராசரியாக 5,000 பேர் வரை ஒரு மொழியைப் பேசுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 4,000 மொழிகளைப் பேசுபவர்கள் ஆதிவாசிகள் எனக் கணக்கிடப்படுகிறது. 8384 சதம் மொழிகள் ஒரே ஒரு நாட்டில் மட்டுமே பேசப்படுபவையாக உள்ளன.

சில மொழிகள் மிகச் சிலரால் மட்டுமே பேசப்படுகின்றன. பப்புவா நியூகினியாவில் உள்ள குருமுலும் என்ற இனத்தில் 10 பேர் மட்டுமே ஒரு மொழியை பேசுகின்றனர். மொழிகளின் பட்டியலில் முதல் 10 இடங்களிலுள்ள மொழிகள் மொத்த உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதம் மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன.

சில மொழிகளின் எண்ணிக்கை வருமாறு: அமெரிக்கா 1,013 மொழிகள் (15 சதம்); ஆப்பிரிக்கா 2,058 மொழிகள் (30 சதம்); ஐரோப்பா 230 மொழிகள் (3 சதம்); ஆஸ்திரேலியா 250 மொழிகள் (1 சதம்); ஆசியா 2,197 மொழிகள் (32 சதம்); பசிபிக் 1,311 மொழிகள் (19 சதம்).

பப்வா நியூகினியா 850 மொழிகள்; இந்தோனேசியா 670 மொழிகள்; நைஜீரியா 400 மொழிகள்; இந்தியா 380 மொழிகள்; கேமரூன் 270 மொழிகள்; மெக்சிகோ 240 மொழிகள்; பிரேசில் 210 மொழிகள்; ஸைர் 210 மொழிகள்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மொழியியலாளர் டோவ் ஸ்கட்நாப் கங்காஸ் என்பவர் மொழி ஆய்வுகள் பல நடத்தப்பட்ட போதிலும், புள்ளி விவரங்கள் துல்லியமானதாக இல்லையென்றே கருதுகிறார். மொழிகளுக்கும், சீதோஷ்ண நிலைக்கும் தொடர்பு உண்டு என்கிறார் நிதின் சேத்தி என்ற ஆய்வாளர். மொழி உலகம் என்ற வரைபடம் மூலம் வெப்பம் மிகுதியாக உள்ள நாடுகளில் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன என்கின்றனர். மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரை மற்றும் இந்தியாவிலிருந்து தொடங்கி, தென் கிழக்காசிய பகுதிகளிலுள்ள இந்தோனேஷியத் தீவுகள் பசிபிக் வரையுள்ள பகுதிகளிலுள்ள இந்தியா உள்ளிட்ட 17 மிகப் பெரிய நாடுகளில் உள்ள மொழிகளில் 60 சதவீதம் பேசப்படுகின்றன.

அமெரிக்கா மற்றும் கனடாவில் பழங்குடி மக்களால் பேசப்படும் சுமார் 80 சதவீத மொழிகள் அவர்களுடைய குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை. இதனால் கனடாவில் 60 மொழிகள் பேசப்பட்டு இன்றைக்கு 4 மொழிகளே நிலைத்து நிற்கின்றன. ஆஸ்திரேலியாவில் அங்குள்ள பழங்குடிகள் பேசிய 250 மொழிகள் மறைந்தே விட்டன என்று மொழியியல் அறிஞர் நெட்டல் கூறுகின்றார். தற்போது ஆஸ்திரேலியாவில் 250 மொழிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பேசப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் 54 மொழிகள் படிப்படியாக அழிந்துவிட்டன. 116 மொழிகள் மறையும் சூழலில் உள்ளன என்று மொழியியல் அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பூர்வகுடி இன மக்கள் பேசுகின்ற மொழிகள்தான் படிப்படியாக அழிந்து வருகின்றது என்றும், நகர்ப்புற வளர்ச்சிகள், உலகமயமாக்கள் என்பது போன்றவை மொழிகளின் அழிவுக்கு காரணங்கள் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மைசூரில் உள்ள இந்திய மொழியியல் கழகம் மொழிகள் அழிவது குறித்து தடுக்கக்கூடிய முயற்சிகள் எவை எவை என்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. மொழிகளை பாதுகாப்பதன் மூலமாக ஒரு இனத்தின் கலாச்சாரம், பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பாதுகாக்க முடியும். 

65 ஆயிரம் ஆண்டுகளாக அந்தமான் நிக்கோபர் தீவில் பேசப்பட்ட போ என்ற மொழி அழிந்துவிட்டது. அந்தமான் மொழிகளில் சிறப்பு வாய்ந்த போ மொழி பேசிய 80 வயதான பெண் இறந்தவுடன் அந்த மொழி முடிவுக்கு வந்துவிட்டது. 2004இல் ஏற்பட்ட சுனாமி கோரத்தின் போதுகூட துக்கத்தில் பாடப்பட்ட போ மொழி பாடல்கூட வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதுதான் உலகிலேயே பழமையான மொழி என ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி கூறுகிறார். அந்தமானில் மறைந்த போ மொழியில் அரிய மருத்துவ செய்திகள் இருந்தன. செடி கொடிகளிலிருந்து மருந்து தயாரிக்கக் கூடிய நடவடிக்கைகள் அந்த மொழியில் இருந்தது. ஆனால் அந்த மொழியின் மறைவால் நமக்கு மருத்துவ தகவல்கள் கிடைக்காமலேயே போய்விட்டது. குரா என்ற அந்தமான் மொழியும் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. அங்கு ஜிரா என்ற மொழியை 50 பேர் மட்டுமே தற்பொழுது பேசி வருகின்றனர். 150 வருடங்களுக்கு முன்னால் இந்த தீவில் 10 மொழிகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் பெரும்பாலான மொழிகள் தற்பொழுது பேச்சு வழக்கில் இல்லை.

கேரளாவின் கொச்சியை சேர்ந்த வில்லியம் ரொசாரியோ கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்டு 20இல் மரணமடைந்தவுடன் அப்பகுதியில் பேசப்பட்ட மலையாள போர்ச்சுகீஸ் கிரியோல் என்ற மொழி மறைந்தது. 400 ஆண்டுகளாக கேரள கத்தோலிக்கர்களின் அடையாளமாக இந்த மொழி திகழ்ந்தது. ரெமோ என்ற ஒரிசா மொழி போண்டா என்ற ஆதிவாசிகளால் பேசப்பட்டு, இந்த ஆதிவாசிகள் மக்கள் தொகை குறைந்து இம்மொழியும் அழிந்துவிடும். 20 இலட்சம் மக்கள் பேசும் கோந்தி மொழி சத்தீஸ்கர் மாநிலத்தில் எந்த பள்ளியிலும் பாட நூலாகவே இருக்கவில்லை. அதன்பின் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தினால் அந்த கோந்தி மொழியில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு ஆரம்ப பள்ளிகளில் பாடங்களாக கற்பிக்கப்படுகின்றன.

மொழிகளைப் போன்றே வட்டார வழக்கு பேச்சு மொழியும் அழிவு நிலையில் இருக்கின்றது. ஒரு வட்டாரத்திலிருந்து வேறு வட்டாரத்திற்கு மக்கள் சென்று விடுவதால், அந்த வட்டார சொற்கள் மறைந்து விடுகின்றன. இவை மறையாமல் இருக்க, சென்னை செம்மொழி தமிழாய்வு மய்யம் அந்த சொற்களை சேகரம் செய்து பதிவு செய்து வருகிறது. இன்னொரு செவி வழி செய்தி: உருது மொழியின் வயது 300 ஆண்டுகள் தான் என்றும், இந்தி மொழி உருவெடுத்து 150 ஆண்டுகள்தான் ஆகின்றன என்ற கருத்துகளும் உள்ளன.

 தென்னிந்திய பகுதிகள் டெக்கான் என்று அழைக்கப்பட்ட காலத்தில் அங்கு மராட்டி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் பேசப்பட்டன. வட இந்திய படையெடுப்பிற்கு பின் அவர்களது மொழியான அவதியும் இங்கு பேசப்பட்டது. இவையாவும் ஒன்று சேர்ந்து தக்கனி மொழி உருவாயிற்று. அரபு நாடுகளில் அல்ஹிந்த் என்றே டெக்கான் பகுதியை அழைத்தனர். மேலும் அவர்கள் அல்ஹிந்த் செல்வம் கொழிக்கும் நாடு என்று நம்பியதன் காரணமாக பெருவாரியாக இங்கு வந்தனர். பாமினி மற்றும் ஹைதராபாத் நாடுகளிலும் தக்கனி மொழிதான் பேசப்பட்டு வந்துள்ளது.

1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நிஜாம் அரசின் பகுதிகள் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுடன் இணைக்கப்பட்டது. இங்கு புழக்கத்தில் இருந்த பார்சி, அரபு மற்றும் தக்கனி மொழியும் வழக்கில் இல்லாமல் போய்விட்டது. முகாலய மன்னர்களின் ஆதரவால் உருது மொழி வளர்ந்தது. உருது என்ற சொல்லுக்கு இராணுவ முகாம் என்று பொருளாகும். 

மதுரா, டில்லி, ஆக்ரா போன்ற பகுதிகளில் பிரஜபாஷை பேசப்பட்டு வந்தது. பிரஜபாஷையோடு இந்தி மொழி கலந்து உருவானதுதான் கரிபோலி என்ற மொழியாகும். மேலும் டில்லியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கரிபோலியே இலக்கிய மொழியாக விளங்கியது. பார்சி அரபு லிபியில் எழுதப்பட்ட காலத்தில், உருது என்கிற தேவநாகிரி லிபியில் எழுதப்பட்ட மொழி இந்தி என்று அழைக்கப்பட்டது. பெரும்பாலும் இந்தியர்கள் பார்சி மொழியைப் புறக்கணித்து இந்தி மொழியையே பயன்படுத்தினர். எனவே, வட இந்தியரின் மொழியாக இந்தியும், அரபி லிபியில் எழுதப்பட்ட உருது மொழி இஸ்லாமியர்களின் மொழியாகவும் விளங்கின.

மொழிகள் அழிவு எவ்விதம் நிகழ்கிறது? ஒரு மொழியைப் பேசுபவர் மறைந்ததாலோ அல்லது கொல்லப்பட்டாலோ மொழியும் மரணமடைகிறது என்கிறார் கிறிஸ்டல். “உலகமயமாதலின் காரணமாக மூன்றில் ஒரு பங்கு மொழிகள் மறைந்துள்ளன” என்று அழுத்தமாகக் கூறும் கிறிஸ்டல், “தொழில் நுணுக்கத்தின் ஊடுருவலால், உலகின் மூலை முடுக்குகளில் கூட பேசும் மொழிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்கிறார். ஒரு குறிப்பிட்ட மொழி ஆதிக்கம் செலுத்துவதைக் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, கனடாவில் ஆங்கில மொழியும், தென் அமெரிக்காவில் ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் மொழிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மொழியியல் துறை பேராசிரியர் அன்விதா அப்பி, இந்தியாவில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட ஒரு மொழியின் ஆதிக்கம் காரணமாக காலம் காலமாகப் பேசப்பட்டு வந்த மொழிகள் மறைவதைப் பற்றி ‘டோவ்’ (கூணிதிஞு) கூறுகையில், “மொழிகளின் மரணம் என்பதை என்னால் ஏற்க இயலவில்லை. மாறாக படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்த நான் விரும்புகிறேன். உலகமயமாதலால், ஊடகங்களும், கல்வி நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட மொழியை முதன்மையாக வைத்து, மற்ற மொழிகளை அழிக்கும் பணியைச் செய்கின்றன. இராணுவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய அனைத்திலும் மேலாதிக்கம் செலுத்துவோர் மொழி ஆதிக்கம் செய்கின்றனர்” என்கிறார்.

மொழி உரிமை என்பது மனித உரிமையாகும் என்கிறார் டோவ். இந்தியாவையே எடுத்துக் கொண்டால் 300க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்த போதிலும், 16 மொழிகள் மாநில மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அனைத்து மொழிகளும் முக்கியமானவை என்பதை அங்கீகாரம் செய்வதே மொழிப் பாதுகாப்பின் முதல் படியாகும்.

இந்திய அரசியல் சாசனத்தில் 8வது பட்டியலில் சொல்லப்பட்டுள்ள 22 மொழிகள் சேர்க்கப்பட வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கை அரசு தரப்பில், ஒரு மொழியை குறைந்தபட்சம் 10,000 பேர் பேசினால்தான் மொழி என்ற வரையறைக்கு உட்படும். இந்த அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்படாத 100 மொழிகளை மூன்று விழுக்காடு இந்திய மக்களே பேசுகின்றனர். குஜராத்தில் அழிவின் விளிம்பில் உள்ள பிலி என்ற மொழியை பாதுகாக்கும் காஞ்சிபடேல் கூறுவது என்னவென்றால்; ஒரு மொழியை பாதுகாக்க வேண்டுமென்றால் அந்த மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதன் இலக்கியங்கள் வெளியிடப்பட வேண்டும். அப்படி செய்தால்தான் ஒரு மொழியை பாதுகாக்க முடியும் என்கிறார். 

இம்மாதிரி மொழிகளை பாதுகாக்க பாஷா என்ற அமைப்பை ஏற்படுத்தி கணேஷ் டெவ்லி என்பவர் நடத்தி வருகிறார். இமாலய பகுதியில் ஹிம்லோக் அமைப்பு, ஜார்கண்ட் மாநிலத்தில் மண்டர், ஹோ, அகர், க்ரியா, குருக்ஸ் போன்ற மொழிகளை பாதுகாக்க ஜார்கண்டி பாஷா சாகித்திய சனஸ்க்ருதி அகரா என்ற அமைப்பு பாடுபட்டு வருகிறது. ஜோகர் நிகம் கபர் என்ற மாத இதழ் மூலமாக மொழிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரசன்னஸ்ரீ குர்ரு இன மக்களின் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்துள்ளார். ஆந்திரா மற்றும் ஒரிசாவில் கொண்டா டொரா மொழி பேசப்பட்டு வந்தது. ஆனால் பழங்குடி மக்கள் தற்சமயம் ஒரியா மொழியை பேச ஆரம்பித்துவிட்டதால், இந்த மொழியை காக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கு வங்கத்தில் சந்தால் மக்களின் மொழியான ஒல்சிக்கி பேச ஊக்குவிக்கப்படுகிறது. லிவிங் டங்க்ஸ், சர்வைவல் இன்டர்நேஷனல், சொரோ சொரோ போன்ற அமைப்புகள் அழிந்து வரும் இந்திய மொழிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

உலகில் உள்ள கிட்டத்தட்ட 6,000 மொழிகள் அதிகமானோரால் பேசப்படுகிறது. அப்பட்டியலில் முதல் 20 மொழிகளில் தமிழ் உள்ளது என்பது தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி எனலாம். தமிழ் மொழியின் தோற்றம் பற்றி கால வரையறை செய்ய முடியாது; செம்மொழித் தன்மையைத் தமிழ், இயற்கையாகவே தன்னிடம் கொண்டுள்ளது. 

யுனெஸ்கோ வெளியிட்டுள் அழியும் மொழிகள் எனும் பட்டியலில் தமிழ் இடம் பெறவில்லை. தமிழின் உயிர்த் தன்மை அந்த நிலைக்குச் செல்கின்ற வாய்ப்பில்லை என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. உலகில் எந்தெந்த மொழிகள்  அதிகம் பேசப்படுகின்றன என்ற எண்ணிக்கை: 1. சீனம் (மான்ட்ரின்) 88,50,00,000; 2. ஸ்பானிஷ் 32,20,00,000; 3. ஆங்கிலம் 32,20,00,000; 4. வங்காளம் (பெங்காலி) 18,90,00,000; 5. இந்தி 18,20,00,000; 6. போர்ச்சுகீஸ் 17,00,00,000; 7. ரஷ்யன் 17,00,00,000; 8. சுப்பானிய மொழி (ஜப்பானிஸ்) 12,50,00,000; 9. ஜெர்மன் 9,80,00,000; 10. சீனம் (வு) 7,72,00,000.

உலகமே சுருங்கி விட்டதாகக் கூறப்படும் இன்றைய சூழலில், தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் மூலம் பிற கலாச்சாரம் நுழைந்துள்ளது. உத்தமர் காந்தியார் அந்நிய கலாச்சாரம் பற்றிச் சொல்லும்போது, “எனது வீடு சுவர்களால் அடைத்து இருப்பதை நான் விரும்பவில்லை. எனது வீட்டின் ஜன்னல்கள் திறந்தே இருக்க வேண்டும். உலகின் அனைத்துக் பகுதி கலாச்சாரமும் எந்தத் தடையுமின்றி வீட்டிற்குள் வருவதை விரும்புகிறேன். ஆனால் அந்த அலை என்னை அடித்துச் செல்ல விடமாட்டேன்” என்று கூறினார். இன்றைய உலகமயமாக்கல் முறையில் பன்னாட்டு உறவால் சிலருக்கு தாய் மொழி மீது உள்ள பற்று குறைந்து வருகிறது. இது ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். தான் பிறந்த மண், தாய் தந்தை, தாய் மொழி, தனது கலாச்சாரத்தை பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதி எடுக்க வேண்டும். தாய் மொழி என்பதில் ஒவ்வொருவரின் தன்மானமும், பெருமையும் அடங்கியுள்ளது என்பதை சிந்திக்கத் தவறக் கூடாது.