புறக்கணிக்காதீர் விவசாயத்தை!
‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்பது மெய்ப்பட்டு, இன்றைக்கு விவசாயிகள் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். புதிய பொருளாதாரக் கொள்கையால் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றைக்கு இங்கு வந்தனவோ அன்றிலிருந்தே விவசாயம், சிறு தொழில்கள், கிராமப்புறத்தின் தனித்தன்மைகள் போன்ற யாவும் நசிந்து வருகின்றன. விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 5,56,193 என்று தேசியக் கணக்கு தகவல் அறிக்கை சொன்னாலும், அதைவிட அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்ற வாதமும் உள்ளது. இப்பிரச்சினையில் முதல் ஐந்து இடங்களில் மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன. கிராமப்புறத்தில் பிறந்து, வளர்ந்தவர்களுக்கு விவசாயம் இவ்வாறு பாழ்பட்டுப் போய்விட்டதே என்ற வேதனை வாட்டுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்தது போன்றவை ஆறுதலான செய்தியாக இருந்தது. இந்தியாவில் விவசாய குடும்பங்கள் 48.6 சதவீதத்தினர் கடனில் சிக்கித் தவிக்கின்றனர். இதில் ஆந்திரம் முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம். அதாவது, 74.5 சதவீதம். தமிழக விவசாயிகள் விளைச்சல் பாதிக்கப்படுவதால் மூலதன செலவினங்களுக்கு அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத குடும்ப செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாய நிலங்களின் அளவும் குறைந்து வருகிறது; சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், வீட்டுமனைகள் என 20 இலட்சம் ஹெக்டேர் நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன ஏரிகள், குளங்கள் காணாமல் போய்விட்டன. கிராமப்புறத்தில் வாழ்வது சிரமம் என்று பலர் நகர்புறத்தை நோக்கி வந்துவிட்டனர். விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் வருவதில்லை. சமீபத்தில் விவசாயப் பணிக்காக கிராமத்தில் தங்கியிருந்த போது வேலைக்கு ஆட்களைக் கூப்பிட்டால், அவர்கள் ஆர்வம் காட்டாமல் மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்திற்குதான் செல்கின்றனர். அங்கு வேலை கிடையாது; பணம் கொடுக்கிறார்கள். வீட்டிலேயே இருந்து கொள்ளலாம் என்ற மனநிலை வந்துவிட்ட காரணத்தாலும், விவசாயக் கூலியும் கூடி விட்டதால் விவசாயிகள், நிலங்களை தரிசாக போட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டோ அல்லது நகரத்திற்கு சென்று வியாபாரம் செய்யலாம் என்று எண்ணி விவசாயத்தை கைவிட்டுவிட்டனர். கிராமப்புற மக்கள் தொகை 10 சதவீதம் வரை குறைந்துவிட்டது என்று 2011 கணக்கெடுப்பு சொல்கிறது. ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பும் கிராமப்புற மக்கள் தொகை குறைந்து வருவதை காட்டுகின்றது. கிராமத்திலிருந்து கொண்டு பிழைக்க முடியாது என்ற நிலையில்தான் விவசாயிகள் நகர்புறத்திற்கு இடம் பெயர்கின்றனர்.
பாடுபடும் விவசாயிகளுக்குக் கையும் காலும்தான் மிச்சம் என்று பட்டுக்கோட்டைக் கவிஞர் சொன்னதைப் போன்று விவசாயிகளுடைய சமூக, பொருளாதார நிலை நாளுக்கு நாள் மிகவும் தாழ்ந்துகொண்டே செல்கிறது. “விவசாயிகள், ‘வேலையே வாழ்க்கை’ என்று தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர்” என்கிறார் கரிசல் இலக்கிய பிதாமகன் கி.ராஜநாராயணன். விவசாயிகள் என்போர் ஏகலைவன் போன்றவர்களாவர். அவர்கள் தங்களுடைய விவசாயத் தொழிலை எந்த ஆசானின் மூலமோ அல்லது தொழிற் கல்வியாலோ தெரிந்து கொண்டதில்லை. தொன்றுதொட்டு பாரம்பரியமாகத் தானாக அறிந்து கொண்டு, தன்னைத் தானே விவசாயத்திற்கு அர்ப்பணித்துக் கொள்கின்றனர். நகர்ப்புற வாசனையோ, அடிப்படை வசதிகளையோ அறியாதவனாகவே பிறந்து விவசாயமே தன் உயிராக நினைத்து கிராமத்திலே வாழ்ந்து மடிகிறான்; இது ஒரு காலம்; அதாவது 1950, 60, ... 90 வரை இந்நிலை.
‘இந்திய நாட்டின் முதுகெலும்பு விவசாயமே’ என்று மார்தட்டிக் கொள்ளும் அரசு, விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய பொருளாதாரச் சட்ட திட்டங்களை இன்னும் திருப்திகரமாக வகுக்கவில்லை என்பதே உண்மை. பசுமைப் புரட்சி, மானியங்கள் மற்றும் சலுகைகள் அளிக்கப்பட்டும் அவை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு சரியாகச் சென்றடையாமல் இடைத்தரகர்கள் பயன்பெறும் நிலைதான் தற்போது.
வறட்சி, விளைபொருள்களுக்கு ஆதரவற்ற விலை, கடன் சுமை போன்றவற்றினால் விவசாயிகளுடைய சமூக நிலை மிகவும் பாதிக்கப் பட்டிருக்கின்றது. விவசாயத்திற்கு வேண்டிய இடுபொருள்களான விதை, இரசாயன உரங்கள் மற்றும் இரசாயன மருந்துகள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவு, தங்களுடைய குழந்தைகள் அருகில் உள்ள நகரத்தில் படித்தால் அதற்கான செலவு ஆகியவற்றையும் ஏற்றுக் கொண்டு, தன்னுடைய சொந்த மண்ணின் மணத்தை சுவாசித்து, தன் தொழிலை செய்து கொண்டே வருகின்றான். இந்த உழைப்பினால்தான், இந்திய உணவு நிலைமையில் தன்னிறைவு அடைந்துள்ளது என்று பெருமை கொள்கிறது. இந்நிலை ஆரோக்கியமாக நீடிக்க வேண்டுமானால் மத்திய மாநில அரசுகளின் கடைக்கண் பார்வை விவசாயிகள் மீது விழவேண்டும்.
விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்கும்பொழுது, அவர்களிடம் எந்தவித செக்யூரிட்டியும் கேட்கக் கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கடன் வாங்க விவசாயிகள் வங்கிக்கு சென்றால் வங்கி அதிகாரிகள், “உன் கூரை வீட்டை நம்பி எப்படி கடன் கொடுப்பது?” என்று விரட்டியடிக்கும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. ஆந்திராவில் ரிசர்வ் வங்கியின் அறிவுரை கடைபிடிக்கப்படாததால், அங்குள்ள விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி, வட்டிக்கு மேல் வட்டி கட்டி மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயிகளின் நிலை சொல்லவே மாளாது. தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை வெட்டி அறவை செய்ய முடியாமல் விரக்தியோடு நன்கு வளர்ந்த கரும்பைத் தீயிட்டுக் கொளுத்துகின்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒரு சமயம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தன் கரும்பை யார் வேண்டுமானாலும் வெட்டி எடுத்துச் செல்லுங்கள் என்று தண்டோரா போட்டு அறிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி முத்தரப்புக் கூட்டம் கூட்டி கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யுங்கள் என்றும், கரும்பு வாகன வாடகை சரியாக வழங்குவதில்லை என்றும் விவசாயிகள் குறை கூறுகின்றனர். கரும்பை அறவை செய்ய பதிவு செய்து 18 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலைமையோடு அடிமாட்டு விலைக்கு கரும்பை விற்க வேண்டியுள்ளது. தென்னை உற்பத்தி விவசாயிகளின் நிலைமையும் மோசமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்ட நோயினால் பல மரங்கள் பட்டுப்போய் விட்டன. நிவாரணம் கிடைக்காமல் தென்னை விவசாயிகளும் போராடி வருகின்றனர்.
1960ஆம் ஆண்டு நெல் மூட்டை ரூ.30/. சிமெண்ட் மூட்டை அப்போது ரூ.5/க்கு கிடைத்தது. சிமெண்ட் விலை பன்மடங்கு ஏறிவிட்டது. ஆனால் நெல்லுக்கு விலை ஏறவில்லை. மிளகாய், பருத்தி உற்பத்தி செய்யும் மானாவரி விவசாயிகளுக்கு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஆதரவான நல்ல விலை கிடைக்கிறது. ஒரு வருடப் பராமரிப்பில் வாழை பயிரிட்டு ஒரு வாழைப்பழம் 10 பைசாவுக்கு விவசாயியிடம் வாங்கி, நகரத்தில் ரூ.1.50க்கு விற்கப்படுகிறது. இந்த ஒரு வருடக் காலத்தில் காற்றின் சீற்றத்தால் சில சமயங்களில் வாழை மரங்கள் சாய்ந்து அழிவதும் உண்டு. இப்படித் தொடர்ந்து இடைத்தரகர்களால் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதால் செலவில்லாமல் பல கிராமங்களில் கருவேல மரங்களை நட்டுவிட்டனர். விவசாய உற்பத்திப் பொருள்களின் விலை கட்டுப்படியான வகையில் நிர்ணயிக்க சம்பந்தப்பட்ட அதிகார வர்க்கம் பாராமுகமாகவே உள்ளது.
தமிழகத்தில் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினையால் விவசாயிகள் நீர் ஆதாரங்கள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். காவிரிப் பிரச்சினையில் காவிரி டெல்டா பகுதியில் சிறு விவசாயிகள் எலிக் கறியைச் சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். கிராமப்புறங்களில் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் தூர் வாராமல் நீர்ப்பிடிப்பு குறைந்து வருகிறது. விவசாயிகள் சார்புத் தொழிலாக நடத்தும் பால் பண்ணைகளும், ஆட்டுப் பண்ணைகளும் தொடர்ந்து நடத்த முடியாமல் தவிக்கின்றனர்.
இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவுசார் ஒப்பந்தமும் நமது விவசாயத்தை பாதித்தது. சந்தையின் அனைத்துப் பலன்களையும் சுரண்டி அனுபவித்துவிட்டு, நம் மீதே பழி போடுவது அமெரிக்காவின் எழுதப்படாத சட்டமாகும். கடந்தகால ஆட்சியாளர்கள் தவறான பொருளாதார கொள்கை வகுத்ததன் விளைவாக ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்பதைப் போல அமெரிக்கா சொல்வதை நாம் கைகட்டிக் கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
பயிர்களும், மரங்களும் இயற்கையின்படி தானாக வளர வேண்டும். நாம் வளர்க்கக் கூடாது. இயற்கையின் வழியில் அது வளரட்டும். அதை ஒழுங்குபடுத்தி சீர் செய்வது மட்டும்தான் நமது பணியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு குணம் உண்டு. அதற்கேற்ப பயிர் வளமும், நீர் வளமும் இயற்கையாக அமைந்தது. அந்த குணத்தை நாம் மறந்தோம்; நாம் அழித்தோம். நம் மண்ணிற்கான நடைமுறைகளை இறக்குமதி செய்து செய்முறைகள் செய்தால் அது இயற்கைக்கு மாறாகத்தான் இருக்குமேயொழிய ஆக்கப்பூர்வமான பணியாக இருக்காது.
இந்திராகாந்தி காலத்தில் சி.சுப்பிரமணியம் உணவு அமைச்சராக இருந்தபோது, கோதுமை வழங்குவதிலும், பசுமைப் புரட்சித் திட்டத்திலும் நாம் ஏமாற்றப்பட்டோம். அவர்கள் சொல்லிய கட்டளைகளுக்கு அடிபணிந்தோம். நம்முடைய இயற்கை விவசாயத்தைக் கைவிட்டோம். அமெரிக்காவின் இரசாயன உரத்தை மண்ணில் போட்டு நம் பூமியை கெடுத்தோம். பூச்சி மருந்துகள் என்ற பெயரில் தெளித்து அதில் வரும் உணவுப் பொருள்களை சாப்பிட்டு நமது உடல் ஆரோக்கியத்தை இழந்தோம். ஆட்டுக் கிடை, கால்நடைகளுக்குக் கொடுக்கும் வைக்கோல், தழைகள் போன்றவை இயற்கை விவசாயத்தில் உருண்டு திரண்டு இருந்தது. தற்போது இரசாயன உரங்கள், பூச்சி மருந்தால் வைக்கோல் சுருங்கிப் போய் அதையே மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பது சத்தற்ற தீவனமாகி விட்டது. நெல் விளையும் காவிரி டெல்டாவில் மரங்களை நட்டு வயல்வெளியின் இயற்கைத் தன்மையை நமக்கு நாமே அழித்துக் கொண்டோம்.
1870இல் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சமும் பட்டினியும் சொல்லில் அடங்கா. அந்தக் காலகட்டத்தில்கூட நமது இயற்கை விவசாயத்தைக் கைவிடாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தோம். பணப் பயிர்கள் மூலம் பணப்புழக்கம் ஏற்பட்டதன் விளைவாக டெல்டா பிரதேசத்தில் நெல்லை மாற்றி பணப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. காவிரி டெல்டாவில் நெல்லும்; ஒன்றுபட்ட நெல்லை, கோவை மாவட்டங்களில் பருத்தி, நெல், தென்னையும்; ஒன்றுபட்ட இராமநாதபுரம், நெல்லை மாவட்டத்தில் மிளகாய், சோளம் மற்றும் பருப்புப் பயிர்கள்; ஒன்றுபட்ட வடாற்காடு, தென்னாற்காடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் நிலக்கடலையும்; தென்னாற்காடு, தஞ்சை மாவட்டங்களில் கரும்பும் என ஆண்டாண்டு காலமாகப் பயிரிடப்பட்ட நடைமுறைகள் இன்றைக்கு இல்லை. இப்படி ஆதியில் நமக்கு நாமே வகுத்துக் கொண்ட இயற்கை விவசாய நெறிமுறைகளை நாமே மாற்றிக் கொண்டதால் ஏற்பட்ட விளைவே தற்போது விவசாயத்தில் ஏற்பட்டுள்ள விபரீத நெருக்கடியாகும்.
வெளிநாட்டினர் ‘மான்சாண்டோ’ விதைகள் கொண்டு வந்து நம் நாட்டில் விதைத்து நம் பூமிக்குக் கேடு செய்தனர். நம்மிடம் இருந்த விதைகளைத் திருடி அப்புறப்படுத்தியதால்தான் கேடு தருகின்ற இம்மாதிரி விதைகளை வாங்குகின்ற சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். உழவர்களின் கையில் இருக்கும் விதைகள் தனியார் நிறுவனங்களுக்கு மாறிவிடும். விளைச்சலும் நிச்சயம் இருக்காது. கடந்த காலங்களில் மான்சாண்டோ விதைகளால் பருத்திக் காய்கள்கூட வெடிக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் போராடி நஷ்டஈடு பெற்றனர்.
இந்நிலையில் குறைந்தபட்சம் சில நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
1. விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து முழுவதுமாக மீட்க வேண்டும். கடனுக்கான வட்டியை 4 சதவீதமாகக் குறைப்பதோடு கூட்டு வட்டியும் ரத்து செய்ய வேண்டும். வறட்சி, வெள்ளம் காலங்களில் முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
2. பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவாக்க வேண்டும்.
3. விலை ஏற்றத் தாழ்வுகளை நீக்கி, சீரான இலாபகரமான விலையை விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு வழங்க ஒரு நிதியம் ஏற்படுத்த வேண்டும்.
4. விவசாய உற்பத்திப் பொருள்களில் இடைத்தரகர்கள் அடிக்கும் கொள்ளையைத் தடுக்க வேண்டும்.
5. பயிர் இழப்புக்கு ஆளாகும் விவசாயிகளைப் பாதுகாக்க பேரிடர் நிதியம் ஒன்றை அமைக்க வேண்டும்.
6. தொழில் சார்ந்த விவசாய முறையைக் கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
7. விவசாயிகளின் தற்கொலை குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு அதைத் தடுக்கக் கூடிய வகையில் சட்டவடிவமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
8. விவசாயக் பண்டங்களின் இறக்குமதியைப் பெருமளவில் கட்டுப்படுத்த வேண்டும்.
9. விவசாயத்திற்கு நீர் ஆதாரங்களைப் பெருக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை நன்கு பரிசீலனை செய்தால் விவசாயத்திற்கு விடிவுகாலம் ஏற்படும். விடுதலைக்குப் பின் விவசாய நலன் கருதிப் பல குழுக்கள் அமைத்தும் அவற்றின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் கும்பகர்ண தூக்கத்தில் தூசி படிந்த நிலையில் உள்ளன. என்ன செய்ய? விவசாய சங்கத் தலைவர் மறைந்த பானுபிரதாப் சிங், சரத்ஜோஷி போன்றோர் பலமுறை அகில இந்திய அளவில் விவசாயிகளின் போராட்டங்களை நடத்தி விவசாயத்தை ஒரு தொழிலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
அதேபோன்று தமிழகத்தில் 1933இல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், நெல்லை மாவட்டத்தில் மணியாச்சி விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராடியபோது குண்டடிபட்டு ஒரு விவசாயி மடிந்தார்; 1965லிருந்து விவசாயிகள் போராடி, 35 பேருக்கு மேல் காவல் துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகியுள்ளனர். நாராயணசாமி நாயுடு இயக்கம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கவனத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்தது. ‘கிராமங்களில் டீக்கடை வைத்தவர்கள் மாளிகைவாசிகளாக இன்றைக்கு வாழ்கின்றனர். கிராமத்தில் தோல்கள் வாங்க வந்தவர்கள் பெரும் வணிகர்களாக மாறிவிட்டனர். காய்கறிகளையும், புளியங்கொட்டையையும் வாங்க வந்தவர்கள் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உருவாகி விட்டனர். ஆனால், பல ஏக்கர் நிலமுள்ள விவசாயி குடிசை வீட்டிலிருந்து ஓட்டு வீட்டுக்குத்தான் மாறியுள்ளான்’ என்று நடவு இதழ் வேதனையோடு குறிப்பிடுகிறது.
விவசாயி கிணறு வெட்டுவதற்கு அரசு கடன் (இலஞ்சம் போக) வாங்கி, அதனால் ஒன்றும் பயனில்லாமல்போக, இருக்கின்ற சொந்த தோட்டத்தையும் கடனில் வெட்டிய கிணறையும் விற்று கூலி விவசாயி ஆகி இழிந்த நிலைக்குத் தள்ளப்படுகின்ற பரிணாம பரிதாப நிலைதான் உள்ளது. இதுதான் இன்றைய யதார்த்த விவசாயியின் நிலைமை. பாடுபட்டு, விவசாயிகள் வியர்வையை விதைத்து, வேதனையை அறுவடை செய்கிறார்கள். தொழிற் துறையில் அதிக ஆர்வம் காட்டிய பண்டித நேரு, நாடாளுமன்றத்தில் பேசும் பொழுது, “யாரும் எதற்காகவும் காத்திருக்கலாம்; ஆனால் வேறு எதற்காகவும் விவசாயம் காத்திருக்க முடியாது” என்று வேளாண்மையைப் பற்றி கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். விவசாயம் ஒரு தொழில் என்று இல்லாமல், அது பல ஜீவன்களை காக்கின்ற ஆதார சக்தியாகும். இந்தியாவில் விவசாய மண்வாசனை, கிராமிய கலாச்சாரங்கள் பாழ்பட்டுப் போய்க் கொண்டிருப்பதை இன்றைக்கு எட்டையபுரத்து முண்டாசுக் கவிஞன் இருந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே.... என்ற பாடலில் இந்தத் துயரத்தைச் சொல்லியிருப்பான். விவசாயத்தை புறக்கணிக்காதீர்! அந்த புறக்கணிப்பு நமது தாய் மண்ணை புறக்கணிப்பதற்கு ஒப்பாகும்.